துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோரை கொண்ட இந்திய ஜோடி முன்னேறி உள்ளது.
துபாய் டூட்டிபிரி ஏடிபி வேல்ட் டூர் டென்னிஸ் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் இரட்டையர் பிரிவிற்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடியும், ஆஸ்திரேலியா ஜோடியும் மோதியது.
இந்திய ஜோடியில் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோரும், ஆஸ்திரேலிய ஜோடியில் ஜூலியன் நவுல், அலெக்சாண்டர் பெயா ஆகியோரும் ஆடினர். விறுவிறுப்பான முதல் செட்டை இந்திய ஜோடி 7-6 என்ற கணக்கில் வென்றது.
முதல் செட் 'டை பிரேக்கருக்கு' சென்ற நிலையில், 2வது செட்டும் 'டை பிரேக்கரு'க்கு சென்றது. இதில் இந்திய ஜோடி சுறுசுறுப்பாக ஆடி மீண்டும் 7-6 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் போட்டியின் இறுதியில், 7-6, 7-6 என்ற நேர் செட்களில், இந்திய ஜோடி வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.
போட்டியை குறித்து மகேஷ் பூபதி கூறியதாவது,
இன்றைய போட்டியில் எங்களுக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. ஆனால் கடினமான ஆட்டத்திற்கு பிறகே வெற்றி சொந்தமானது. இன்றைய வெற்றியில் ஆறுதல் அடையாமல் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்ற வேண்டியுள்ளது என்றார்.