லண்டன்: முழங்கால் காயம் முழுமையாக குணமடையாததை அடுத்து இங்கிலாந்து வீரர் பிளின்டாப் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் டுவென்டி-20 உலக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 5ம் தேதி இங்கிலாந்தில் துவங்குகிறது. 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி, வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணியுடன் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது.
வரும் 5ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 6ம் தேதி வங்கதேசத்துடனும், 10ம் தேதி அயர்லாந்துடனும் மோதுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஆல்-ரவுண்டரும், நம்பிக்கை நட்சத்திரமான பிளின்டாப் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐபிஎல் சீசன் 2 தொடரில் சென்னை அணிக்காக ஒரு சில போட்டிகளில் பங்கேற்ற நிலையில் நாடு திரும்பினார்.
காயம் அதிகமாக இருந்ததை அடுத்து அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் முழுமையாக தேறாததை அடுத்து அவர் டுவென்டி-20 தொடரில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக அடில் ரஷித் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.