விகன்: இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற போட்டியில் செல்ஸியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் விகன் அத்லடிக் அணியை தோற்கடித்தது.
இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. டேவ் விலன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் செல்ஸியா, விகன் அத்லடிக் அணிகள் மோதின.
போட்டியின் 2வது நிமிடத்தில் செல்ஸியா அணியின் பிராய்னிஸ்லவ் இவனோவிக் முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து 6வது நிமிடத்தில் செல்ஸியா அணியின் பிராங்க் லேம்பார்ட் 2வது கோலை அடித்தார்.
ஆனால் போட்டியின் துவக்கம் முதல் போராடிய விகன் அத்லடிக் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. கோல் கம்பு வரை பல முறை பந்தை பாஸ் செய்து கொண்டு வந்த போதும், விகன் அத்லடிக் அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.
போட்டியின் முதல் பாதியில் விகன் அத்லடிக் அணி வீரர் பிரான்கோ டி சான்டோ கோலுக்குக்கு அடித்த பந்தை கச்சிதமாக பிடித்தார் செல்ஸியா கோல் கீப்பர் பெட் சிச். அதேபோல 2வது பாதியில் கிடைத்த பல கோல் வாய்ப்புகளையும் விகன் அத்லடிக் அணியினர் கோட்டைவிட்டனர். இதனால் போட்டியின் முடிவில் செல்ஸியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இது குறித்து செல்ஸியா அணியின் பயிற்சியாளர் ராபர்டோ டி மேட்டியோ கூறியதாவது,
ஈடன் ஹஸார்ட் இன்று சிறப்பாக ஆடினார். அவரது ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் வகையில் இருந்தது. போட்டியின் துவக்கத்திலேயே 2 கோல்களை அடித்ததால், வெற்றி பெறுவது எளிதானது. இதன்மூலம் போட்டியை முழுவதுமாக எங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம் என்றார்.
இன்று நள்ளிரவில் நடைபெற உள்ள மற்றொரு லீக் போட்டியில் செல்ஸியா அணி, ரிடிங் அணியுடன் மோத உள்ளது.