அவரது பெயர் கமல் ஜெயின். 47 வயதான இவர் நேற்று இரவு பெங்களூர் சின்ன்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதலாவது டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்தார். பரம வைரியான பாகிஸ்தானை இந்தியா பந்தாடி வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் படு உற்சாகமாக போட்டியைக் கண்டு கொண்டிருந்தார். பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் கமல் ஜெயினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ரவி காந்தே கெளடா கூறுகையில், பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 18வது ஓவர் இருக்கும். அப்போது திடீரென கமல் ஜெயினுக்கு நெஞ்சு வலித்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மல்லையா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார் என்றார்.
ஒடிஷாவைச் சேர்ந்தவர் கமல் ஜெயின். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.