
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள 81 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களுடன் 51 நிர்வாகிகள் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, 4 பளு தூக்குதல் வீரர்கள், வில்வித்தை அணியை சேர்ந்த 10 பேர் உட்பட மொத்தம் 14 பேர் கொண்ட முதல் குழு, நேற்று லண்டன் புறப்பட்டு சென்றடைந்தது. அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்திற்குள் நேற்று 14 பேர் கொண்ட இந்திய குழு நுழைந்தது.
இந்திய குழுவில் முதல் நபராக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா நுழைந்தார். இவரை தொடர்ந்து 10 பேர் அடங்கிய வில்வித்தை குழுவினர், பளு தூக்குதல் வீரர்கள் 2 பேர் உட்பட 4 பேர், ஒலிம்பிக் கிராமத்தை அடைந்தனர். இவர்களை இந்திய ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் முரளிதரன் ராஜா வரவேற்றார்.
இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக, கடற்கரைப் பகுதியில் உள்ள எஸ்-1 என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைட்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கு இரட்டை பகிர்ந்தளிப்பு முறையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடியிலும், 2 படுக்கையறைகள், டிவி, இணையதளம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
டைனிங் ஹாலின் ஒரு பகுதியில் இந்தியா மற்றும் ஆசியா வகை உணவுகள் விநியோகிக்கும் கடைகள் உள்ளன. இவை விரைவில் செயல்பட துவங்கும்.
இந்திய வீரர்களுக்கான முறைப்படியான வரவேற்பு நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதை வரும் 25ம் தேதியாக மாற்ற வேண்டும் என்று இந்திய நிர்வாகிகள் கேட்டு கொண்டனர். ஆனால் வேறு தேதியில் நடத்த வாய்ப்பில்லை என்று ஒலிம்பிக் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.