லண்டன்: இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஷஸ் தொடருடன் தான் ஓய்வு பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே முன்னாள் கேப்டன் மைக் ஆத்தர்டன், பிளின்டாபை கடுமையாக விமர்சித்துள்ளார். செகன்ட் ஹேன்ட் கார் மாதிரி ஆகி விட்டார் பிளின்டாப். இனியும் அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பக் கூடாது என்று கூறியுள்ளார். பிளின்டாப் குறித்து அவர் கூறுகையில், எப்போது பார்த்தாலும் காயத்துடனேயே இருக்கிறார் பிளின்டாப். அணியின் வெற்றிக்கு உதவிக் கூடிய தகுதியுடன் அவர் இல்லை.2வது டெஸ்ட் போட்டியில் பிளின்டாப் இடம் பெறாவிட்டால் யாரும் வருத்தப்படத் தேவையில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிளின்டாப் இப்போது இல்லை. எனவே வருத்தப்படத் தேவையில்லை. பிளின்டாப் இப்போது செகன்ட் ஹேன்ட் கார் போல ஆகி விட்டார். செகன்ட் ஹேன்ட்டில் கார் வாங்கினால் இப்படித்தான் அடிக்கடி பழுதடையும். அதுபோலத்தான் இருக்கிறது பிளின்டாப்பின் நிலையும்.இதுபோன்ற கார்களை நம்ப முடியாது, நீண்ட தூரமும் போக முடியாது. அதுபோலத்தான் பிளின்டாப்பும். நம்பிப் போகலாம் என்று நினைக்கவும் முடியாது. அதுபோலத்தான் பிளின்டாப்பும்.2வது டெஸ்ட்டில் பிளின்டாப்புக்குப் பதில் ஸ்டீவ் ஹார்மிசனை சேர்க்க வேண்டும் என்றார் ஆத்தர்டன்.ஆஷஸுக்குப் பிறகு பிளின்டாப் ஓய்வு:31 வயதாகும் பிளின்டாப் காயத்துடன் போராடி வருகிறார். இந்த வலியுடனேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் போட்டியில் அவர் பங்கேற்றார். மீதம் உள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் கூட விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து பிளின்டாப் கூறுகையில், இத்தோடு நிறுத்திக் கொள் என எனது உடல் கூறுகிறது. எனவே ஆஷஸ் தொடருக்குப் பின்னர் ஓய்வு பெற தீர்மானித்துள்ளேன்.மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் எனது முழுத் திறமையை வெளிப்படுத்தவுள்ளேன். எனது முத்திரையைப் பதித்து விட்டு ஓய்வு பெறுவேன்.இங்கிலாந்துக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தால்தான் எனக்கு நிம்மதி என்றார்.கடந்த 11 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார் பிளின்டாப். இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.