
2011-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த பிளட்சர் நியமிக்கப்பட்டார். அவரது 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுகாலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், பிளட்சரின் பதவி காலத்தில் 22 டெஸ்டில் இந்திய அணி 10 போட்டியில் தோற்றது. இந்திய பயிற்சியாளர் ஒருவர் இதே மோசமான நிலையில் இருந்தால் பதவி நீட்டிப்பு இருந்து இருக்காது. கடந்த காலங்களில் ஒரு தொடரில் மோசமாக ஆடியதற்காகவே இந்திய பயிற்சியாளர் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. அப்படி இருந்தும் பிளட்சர் நீட்டிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
அவரது ஒப்பந்ததை நீட்டிப்பது என்பது பற்றி கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் எப்படி விவாதித்தார்கள் என்றே எனக்கு புரியவில்லை. அவருக்கு மேலும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமே. இனிவரும் காலங்களிலாவது அவர் தனது பயிற்சியாளர் பதவியில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் அவர்.