
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய முதல் போட்டியில் குரூப் 'ஏ'வை சேர்ந்த பலவீனமான அணிகளாக கருதப்படும் கிரீஸ், செக் குடியரசு அணிகள் மோத உள்ளன.
செக் குடியரசு அணி தனது முதல் போட்டியில் ரஷ்யாவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. ரஷ்யாவிற்கு எதிரான போட்டியில் செக் குடியரசு தரப்பில் வாக்லவ்பிளர் மட்டுமே ஒரு கோலை அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால் போலந்திற்கு எதிரான முதல் போட்டியில் கிரீஸ் டிரா செய்துள்ளது.
கடந்த போட்டியில் ரெட் கார்டு பெற்ற செக்ராடீஸ் பாபஸ்த்தோபவுலஸ் இன்று கிரீஸ் அணிக்காக விளையாட முடியாது. மேலும் அவராம் பாபஸ்த்தோபவுலஸ் காயம் காரணமாக இன்று விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
கிரீஸ் அணியில் டிமிரிஸ் சல்பின்கிடிஸ், ஸேட்ரீஸ் நினிஸ் ஆகியோர் போட்டியின் போக்கை மாற்றக் கூடிய தன்மை கொண்டவர்களாக உள்ளனர். அதேபோல செக் குடியரசு அணியில் வாக்லவ் பிலர் சிறப்பாக ஆட கூடியவராக உள்ளார்.
இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதி உள்ளன. இதில் கிரீஸ் அணி 1 முறையும், செக் குடியரசு 5 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. 2 முறை முடிவு தெரியாமல் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகள் வெற்றிப் பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.