
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் மொத்தம் 13 போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய மல்யுத்த அணியில் இளம்வீரரான அமித்குமார் தாகியா முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 19 வயது இளம் இந்திய மல்யுத்த வீரரான அமித்குமார் தாகியா 55 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்கிறார். இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் வரும் 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் திட்டத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
லண்டன் ஒலிம்பிக் போட்டி தான் நான் பங்கேற்கும் முதல் மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டி என்ற மனநிலையுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனவே ஒலிம்பிக் போட்டியை தவிர வேறு எதை குறித்தும் நான் யோசிப்பது இல்லை. ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற 100 சதவீதம் திறமையை நான் வெளிப்படுத்துவேன். நாட்டிற்காக என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவி்ல் நடைபெற்ற போட்டியி்ல் தங்கப்பதக்கம் வென்றேன். அதேபோல ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றேன். எனவே நாட்டிற்காக என்னால் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
பிலாரஸில் நடைபெற்ற பயிற்சி முகாமில் எனது எடையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். மேலும் தாக்கும் வேகம், எதிர் தாக்குதல், தடுத்தல் ஆகிய திறன்களை வளர்த்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.