
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்க தேர்வாகி உள்ளனர்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ள இந்திய ஹாக்கி அணி பதக்கம் பெற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்திய வீரர் சந்தீப் சிங், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் கூறியதாவது,
ஹாக்கி போட்டியை பொறுத்த வரை தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் சிறந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று என்று கருதுகிறேன்.
கடந்த 6 மாதங்களாக சிறப்பாக ஆடி வரும் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். எனவே அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
சமீபகாலமாக இந்திய அணி சிறப்பாக ஆடி வருவதால், எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஒலிம்பிக் போட்டியி்ல் முன்கூட்டியே அனைத்து போட்டிகளுக்கும் திட்டமிடாமல், ஒவ்வொரு போட்டியாக திட்டமிட்டு செயல்பட முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம் ஒவ்வொரு எதிரணிக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட முடியும். கடந்த 6 மாதங்களாக நாங்கள் பங்கேற்ற போட்டிகளின் வீடியோக்களை ஆய்வு செய்ததன் மூலம், அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
புனே பயிற்சி மையத்தின் மூலம் இந்திய ஹாக்கி வீரர்களின் உடல்தகுதி இன்னும் மேம்பட்டுள்ளது. மேலும் அணியின் உடல்கூறு ஆலோசகர் டேவிட் ஜான் அணி வீரர்களின் உடல்திறனை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார்.
தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.