கிரைஸ்ட்சர்ச்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ட்வெண்டி-20 போட்டி நாளை கிரைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 ட்வெண்டி-20, 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ட்வெண்டி-20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்திய நேரப்படி பகல் 11.30க்கு துவங்குகிறது.
இந்திய அணி சமீபகாலமாக சூப்பராக விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை புரட்டி எடுத்தது. இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. இதே ஆட்டத்தை இந்திய அண் நியூசிலாந்து மண்ணிலும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆன்டி மோல்ஸ் இந்திய அணியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில்,
இந்திய அணி கடந்த 41 ஆண்டுகளில் ஒரு முறை கூட நியூசிலாந்தில் தொடரை கைப்பற்றியது கிடையாது. ஆனால், புதிய சாதனை படைக்கும் திறமை டோணி தலைமையிலான இந்திய அணியிடம் இருக்கிறது. அவர்களை சாதாரணமாக கருதிவிட முடியாது.
கடந்த 18 மாதங்களாக அவர்கள் விளையாடியதை வைத்து பார்த்தால் அவர்கள் தான் நம்பர் ஒன் அணி என்பதை மறுக்க முடியாது. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றி கொடி நாட்டியுள்ளனர். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை விட இவர்கள் தான் சிறந்தவர்கள்.
இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களது பயிற்சியாளரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார் மோல்ஸ்.
இந்திய தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் கூறுகையில், இந்திய அணியின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் 2-0 என வீழ்த்தினார்கள். அடுத்து இலங்கையை மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றார்கள். இம்முறை எங்களுக்கும் கடும் சவால் தரக்கூடும் என்றார் ரோஸ் டெய்லர்.
அதே சமயத்தில் நியூசிலாந்து இம்முறை இந்தியர்களை வீழ்த்த ஆடுகளங்களை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க தி்ட்டமிட்டுள்ளது. நியூசிலாந்தை விட கைதேர்ந்த வேகப்பந்து வீச்சாள்ர்கள் இந்திய அணியில் இருப்பதால் இம்முடிவு அவர்களுக்கு பாதகமாக முடியும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.