லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் பெரும்பாலான போட்டிகளின் முதல் சுற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
வில்வித்தை: இந்திய வீராங்கனை பம்பாய்லா தேவி இன்று நடைபெற உள்ள தகுதி சுற்று போட்டியில் கிரீஸ் வீராங்கனை கட்ரீனா பலிகாவை எதிர் கொள்ள உள்ளார். பெண்களுக்கான தனி நபர் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாட்மிண்டன்: பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் இ பிரிவை சேர்ந்த இந்தியாவின் சாய்னா நேவால், பெல்ஜியத்தின் லியன் தனை எதிர்கொள்ள உள்ளார். இந்தியர்களில் பதக்க வாய்ப்பு கொண்டவர்களில் சாய்னா நேவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாட்மிண்டன் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பி பிரிவை சேர்ந்த இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வின் போண்ணப்பா ஜோடி, சீனாவின் ச்சிங்-செய்ன் ஜோடி உடன் மோத உள்ளது.
குத்துச்சண்டை: ஆண்களுக்கான 81 கிலோ கொண்டவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் சுமத் சுவகன், பிரேசில் வீரர் யாமாகுசி பால்கோ பிளோரின்டோவை எதிர் கொள்ள உள்ளார்.
துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபல் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நாரங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஹாக்கி: இந்திய அணி இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.