டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கேமரூனை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது.

போட்டியின் 19வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த 'ப்ரீ கிக்' வாய்ப்பை பயன்படுத்தி கிலிபோர்டு மிராண்டா பந்தை பாஸ் செய்ய கவுர்மாங்கி 'ஹெட்டிங்' செய்து அணிக்கு முதல் கோலை பெற்று தந்தார். ஆனால் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் மகோன் தியரி பதில் கோலை அடித்து சமநிலை அளித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
போட்டியின் 2வது பாதியில் 54வது நிமிடத்தில் கேமரூன் அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திய கேமரூன் வீரர் மகோன் தியரி பந்தை தூக்கி அடிக்க கிங்யூ மபோன்டோ ஹெட்டிங் செய்து கோலாக மாற்றினார்.
இந்த நிலையில் போட்டியின் 78வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் செட்ரி கோல் அடிக்க முயன்றார். அப்போது கேமரூன் கோல்கீப்பர் நிகசி ஹோசியா, அவரை தடுத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட இந்திய கேப்டன் சுனில் அணிக்காக 2வது கோலை அடித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட போட்டியின் நேரம் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து சமநிலை வகித்தன. இதனால் கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை அறிவிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் 5 பெனால்டி வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இந்திய தரப்பில் ராபின் சிங், கேப்டன் சுனில் செட்ரி, டென்சில் பிரான்கோ, மேத்தா ஹூசைன், கிலிபோர்டு மிராண்டா ஆகியோர் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை கோல்களாக மாற்றினர்.
ஆனால் கேமரூன் அணியில் 4 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக நேரு கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக இந்திய கால்பந்து அணி கடந்த 2007, 2009 ஆகிய ஆண்டுகளில் நேரு கோப்பையை வென்றுள்ளது.