வெல்லிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை வெல்லிங்டனில் நடக்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை குறிவைத்து களமிறங்குகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மழை வருமா...
இந்நிலையில் இரண்டாவது போட்டி நாளை வெல்லிங்டனில் நடக்கிறது. நேப்பியரில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
இதையடுத்து நாளைய போட்டியாவது முழுமையாக நடக்குமா என்ற ஏக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், வெல்லிங்டன் வானிலை இவர்களது ஏக்கத்தை போக்கும் வகையில் இல்லை.
இங்கு நாளை அடிக்கடி தூறல் விழும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதேசமயம் மழை போட்டியை முற்றிலும் பாதிக்கும் என்றும் சொல்ல முடியாது.
2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தவுடன் அணியில் வீரர்களை அடிக்கடி இடம் மாற்றி களமிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரெய்னா மற்றும் ரோகித் சர்மா கடந்த ஓராண்டாக 3வது முதல் 6வது இடம்வரை மாற்றி மாற்றி இறக்கப்பட்டனர்.
இதே திட்டம் தான் இந்தியா முதல் போட்டியில் வெல்ல கைகொடுத்தது என்கிறார் ஷேவாக். அவர் கூறுகையில்,
நேப்பியரில் டோணி மூன்றாவது வீரராக வருவார் என நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர் வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துவிட்டனர். அவர் வந்தவுடன் அதிரடியாக விளையாடுவார் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். ஆனால், துவக்கத்தில் நிதானமாக விளையாடி, விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தினார். இது அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட உதவியது.
வழக்கமாக துவக்க வீரராக வரும் கம்பீருக்கு அப்போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை. டுவென்டி-20ல் மூன்றாவது வீரராக வந்த ரெய்னா 5வதாக வந்தார். இப்படி பேட்டிங் வரிசையை மாற்றுவதன் மூலம் வீரர்களுக்கு உற்சாகம் பிறக்கும். அனைவருக்கும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
இது இன்றைய போட்டியிலும் தொடரலாம். நானும் கம்பீரும் துவக்க வீரர்களாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றார் ஷேவாக்.
விளையாடுவாரா இஷாந்த்?
காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத இஷாந்த் சர்மா நாளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கூறுகையில், இதுவரை நான் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. இதற்கு முன் கைகளை சுத்தமாக உயர்த்த முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது போட்டியில் விளையாடினால் மகிழ்ச்சி தான் என்றார் இஷாந்த்.
முன்னாள் இந்திய கேப்டன் ரவி சாஸ்திரி கூறுகையில், இஷாந்த் முழுமையாக குணமடையும் வரை விளையாட கூடாது. அடுத்து நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டிக்கு அவர் தேவை. அவர் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது போதுமானது என்றார் ரவி சாஸ்திரி.
இந்தியா இரண்டாவது வெற்றிக்கு தயாராகி வரும் நிலையில் நியூசிலாந்தையும் சாதாரணமாக கருதிவிட முடியாது. நாளை போட்டி நடக்கும் வெல்லிங்டனில் இதுவரை அவர்கள் விளையாடிய 15 போட்டிகளில் 10ல் வென்றுள்ளனர்.
நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி கூறுகையில், வெல்லிங்டன் எங்களுக்கு ராசியான இடம். நாளை வெற்றி பெற கிடைக்கும் வாய்ப்புகளை விட்டுவிடமாட்டோம் என்றார் வெட்டோரி.