செயின்ட் லூசியா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று செயின்ட் லூசியாவில் நடக்கிறது. இப்போட்டியில் வென்று சுமார் இந்திய அணி 7 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் விளையாடி வருகிறது.முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு செயின்ட் லூசியாவில் நடக்கிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி கடும் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளது.கேப்டன் டோணி சூப்பர் பார்மில் இருக்கிறார். மூன்றாவது போட்டியில் துவக்க ஜோடி கம்பீர், தினேஷ் கார்த்திக் நல்ல துவக்கம் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் இன்றும் அணிக்கு நல்ல துவக்கம் தர வேண்டும். ரோஹித், யூசுப் பதான் இதுவரை சொல்லி கொள்ளும்படி பேட் செய்யவில்லை. இவர்களும் அசத்தினால், 7 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மீண்டும் ஒரு, ஒரு நாள் தொடரை வென்று மகிழலாம்.இப்போட்டி குறித்து கேப்டன் டோணி கூறுகையில்,தற்போது இந்திய அணி பேட்ஸ்மேன்களை தான் அதிகம் நம்பியிருக்கிறது. நல்ல துவக்கம் கிடைத்துவிட்டால் போதும் அடுத்து வரும் நமது பேட்ஸ்மேன்கள் மிச்சத்தை பார்த்து கொள்வார்கள் என்றார் டோணி.அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய போட்டியில் நிச்சயம் இந்தியாவை வீழ்த்துவோம் என்கிறார் அந்த அணியின் கேப்டன் கெய்ல்.அவர் கூறுகையில், மூன்றாவது போட்டியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெறுவோம் என நினைத்தோம். ஆனால், இந்தியாவின் துவக்க வீரர்கள் வேகமாக ரன்கள் ஓடி எங்கள் ஆசையை கனவாக்கிவிட்டனர். இன்று கடுமையாக போராடி, வெற்றி பெறுவோம் என்றார் கெய்ல்.