
ஒவ்வொரு நாட்டு ஒலி்ம்பிக் சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் கீழ் வருகின்றன. இந்த சங்கங்களுக்கு தனியாக விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வகுத்துள்ளது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நாட்டு ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து விடும் கவுன்சில்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், மத்திய அரசின் விளையாட்டுத்துறை விதித்த விதிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தற்காலிக நீக்கம் செய்து முடிவெடுத்துள்ளது. தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக 2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் நிதி உள்ளிட்ட எதையும் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலும், காமன்வெல்த் விளையாட்டுக் கழகமும் இதேபோன்ற தடையை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றிலும் இந்தியாவால் கலந்து கொள்ள முடியாது.
இதற்கிடையே ஒலிம்பிக் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தற்காலிக தலைவர் விஜய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தேர்தல் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடமிருந்து எங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வரவில்லை. அது வரட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.