ஆக்லாந்து: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, நான்காவது வெற்றிக்கு தயாராக வருகிறது. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நியூசிலாந்து ஆறுதல் வெற்றி தேடி களமிறங்குகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி டுவென்டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டுவென்டி-20 தொடரை நியூசிலாந்து வென்றது. தற்போது ஒரு நாள் தொடர் நடக்கிறது. நான்கு போட்டியில் வென்று இந்திய அணி 3-0 என நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதித்தது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதால் இதில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது. காயம் காரணமாக நான்காவது போட்டியில் விளையாடாத சச்சின், நாளையும் களமிறங்கமாட்டார். வரும் 18ம் தேதி ஹாமில்டனில் டெஸ்ட் தொடர் துவங்குவதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்து ஜாகிருக்கும் ஓய்வு தரப்படும் என தெரிகிறது. இதையடுத்து நாளைய போட்டியில் இர்பான் பதான் மற்றும் ஓஜா விளையாடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் முதல் 4 போட்டியில் வென்ற இந்திய அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தது. இதேநிலை நாளை நியூசிலாந்து மண்ணிலும் நடந்துவிடக்கூடாது என்பதில் இந்திய வீரர்கள் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையி்ல் இந்திய பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறுகையில், தொடரை வென்றுவிட்ட போதும், கடைசி போட்டியை சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டோம். ஒன்று அல்லது இரண்டு முக்கிய வீரர்களுக்கு மட்டுமே ஓய்வு தரப்படும். இப்போட்டியில் வெல்ல கடுமையாக உழைப்போம் என்றார்.
ஒரு நாள் தொடரில் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்த முடியாத ஏக்கத்தில் நியூசிலாந்து இருக்கிறது. இதையடுத்து சொந்த ரசிகர்கள் மத்தியில் ஆறுதல் வெற்றி தேடி களமிறங்க தயாராகி வருகிறது.
இந்த போட்டி முடிந்தவுடன் டெஸ்ட் அணியில் இடம்பெறாத இந்திய வீரர்களான இர்பான் பதான், யூசுப் பதான், பிரவீண் குமார், ரோகித் சர்மா ஆகியோர் நாடு திரும்புகின்றனர்.