டெல்லி: காமன்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்து வரும் சுரேஷ் கல்மாடி தலைமையிலான கமிட்டி சரிவர செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்தொடர் நடப்பது சந்தேகமாகிவிடும் என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக் பென்னல் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென்னல், டெல்லி காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழுவுக்கு எழுதிய கடிதத்தில்,
தற்போது எங்களுடையை முக்கிய பிரச்சனையை டெல்லி காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு தான். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்யவில்லை.
இதனால் 2002 மான்செஸ்டர் மற்றும் 2006 மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு இணையான தரத்தில் டெல்லியில் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பான்மையான பகுதிகளில் போட்டி ஏற்பாடு வேலைகள் அப்படியே முடங்கி நிற்கின்றன. இதையடுத்து நிர்வாகம் இனி துரிதமாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் போட்டிகளை நடத்துவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படலாம்.
இப்போட்டிகள் துவங்க இன்னும் ஒரு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இது குறித்து நான் பிரதமரை சந்தித்து விரிவாக பேச நினைத்துள்ளேன். இதில் அவர் தலையிட்டு, இந்த பின்னடைவை சமாளிக்க திட்டமிட வேண்டும் என கூற இருக்கிறேன்.
இது தொடர்பாக பிரதமருடன் ஒரு சந்திப்புக்கு வரும் அக்டோபர் மாதத்தில் ஏற்பாடு செய்யுமாறு டெல்லி காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கேட்டு கொண்டுள்ளேன்.
ஒரு வேலையும் உருப்படியில்லை...
இந்திய அரசு இந்த விளையாட்டுக்காக ரூ. 162 கோடி செலவழித்து வருகிறது. ஆனால், டெல்லி காமன்வெல்த் குழு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் நான் இந்தியா வந்தபோது காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு சிறப்பாக இருக்கிறது என கூறினேன். ஆனால், உண்மையில் அது நன்றாக இல்லை. ஒரு வேலைகளும் உருப்படியாக செய்யப்படவில்லை.
பொதுமக்களுக்கு இதை தெரிவித்து காமன்வெல்த் உற்சாகத்தை குறைக்க வேண்டாம் என்று தான் கூறவில்லை. அவர்களிடம் நேரில் இது குறித்து பேசிவிட்டு வந்தேன். தற்போது போட்டி சிக்கலை சந்தித்துவிடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணமாக இதை தெரிவித்துள்ளேன்.
பாதிகூட முடியவில்லை...
அதே போல் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு அறிக்கையும், டெல்லி போட்டி செயல்பாடுகளை குறைகூறுவதாகவே அமைந்துள்ளது.
இந்தியா 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சர்வதேச போட்டியை நடத்துகிறோம் என்ற அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு உடனடியாக தலையிடவில்லை என்றால் போட்டி நடக்காமல் போகும் வாய்ப்பு இருக்காது என தெரிவித்துள்ளது.
மேலும், நீச்சல் போட்டிகள் நடக்கும் மைதானத்தின் வேலைகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 93 சதவீதம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது 42 சதவீதம் முடிந்துள்ளது.
அதன் அறிக்கை இந்திய காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழுவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களிடம் எந்த பதிலும் இதுவரை வரவில்லை என அவர்கள் தெவித்துள்ளதாக அந்த கடிதத்தில் பென்னர் தெரிவித்துள்ளார்.
துரதிருஷ்டவசமானது...
இந்திய காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி தொடர்பு கொள்ள இயலாத நிலையில் அந்த குழுவின் பொருளாளர் ஏகே மட்டூ கூறுகையில்,
பென்னலின் இந்த கருத்துக்கள் துரதிருஷ்டவசமானது. அவர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் எங்களால் முடிந்தவற்றை சிறப்பாக செய்து வருகிறோம். அடுத்தாண்டு காமன்வெல்த் தொடரை சிறப்பாக நடத்த முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சில தாமதங்கள் இருக்கலாம். ஆனால், அதை விமர்சிப்பது எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. அவருடன் பேசி இந்த விவகாரத்துக்கு நல்ல தீர்வு காணுவோம் என்றார்.