
சமீபத்தில் ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டிக்கு சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த நியமனத்தில் பெரும் மோசடி நடந்திருப்பதாக சர்வதேச வீரர்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. கேப்டன்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தாலும், பிறவற்றாலும் அடித்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கியதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து விலகப் போவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் நடந்து வரும் சில நிகழ்வுகள் குறித்து அறிந்தவர்கள் கூறுகையில், சிவராமகிருஷ்ணன் விவகாரத்தை எத்திக்ஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று சர்வதேச வீரர்கள் சம்மேளனம் ஐசிசியை வலியுறுத்தி வருகிறது. இதை பிசிசிஐ ஏற்காது. ஒரு வேளை இதையும் மீறி விசாரணை நடத்தப்பட்டால் அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ மிரட்டியுள்ளதாம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையே மிரட்டிப் பணிய வைக்கும் அளவுக்கு மகா செல்வாக்கு படைத்த அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது விளங்குகிறது. இந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் விவகாரத்தில் அது ஐசிசியை பணிய வைக்குமா அல்லது சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து விலகுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.