கிறிஸ்ட்சர்ச்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. டோணி தலைமையிலான இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.முதல் போட்டியில் தோல்வியுற்ற நியூசிலாந்து நாளை போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என்பதால் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது.மழை இல்லை...இந்நிலையில் மூன்றாவது போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. இஙகு நாளை மழை பெய்யும் வாய்ப்பில்லை என வானிலை மையங்கள் தெரிவித்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.நேப்பியரில் நடந்த இரண்டாவது போட்டியின் போது ஷேவாக் காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர் குணமடைந்துவிட்டதாகவும், அவர் அதிரடிக்கு தயாராக இருப்பதாகவும் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இவருடன் சச்சினும் சிறப்பான பார்முக்கு வந்திருப்பதால் நியூசிலாந்து பவுலர்களுக்கு நாளை சிக்கல் காத்திருக்கிறது. ரெய்னா, டோணி, யுவராஜ் என மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருவது இந்தியாவுக்கு பலம்.பந்துவீச்சில் காயம் காரணமாக இஷாந்த் இடம்பெறவில்லை என்றாலும், அதிக அனுபவமில்லாத நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ஜாகிர், பிரவீன் குமார் கூட்டணி திணறச் செய்கிறது.ஷேவாக் என்றால் பயம்...இந்நிலையில் ஷேவாக்கை கண்டால் தங்களுக்கு பயமாக இருக்கிறது என நியூசிலாந்து வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேப்டன் வெட்டோரி கூறுகையில், பந்துவீச்சில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஷேவாக் மட்டும் எங்கள் பவுலர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டத்தை தடுத்து நிறுத்தவது கடினமாக இருக்கிறது என்றார்.நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கூறுகையில், ஷேவாக் எப்போது அவுட்டாவார் என ஒவ்வொரு போட்டியிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. அவரை விரைவில் வெளியேற்ற நினைக்கிறோம். ஆனால், முடியவில்லை. அவரது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் என்றார் ரோஸ் டெய்லர்இரண்டு போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி கூட கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை கைப்பற்ற நாளைய போட்டியை சேர்த்து அடுத்து நடக்கவிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.கிறிஸ்ட்சர்ச்சில் இந்தியா வெற்றிபெற்றால் தொடரில் 2-0 என முன்னிலை பெறலாம். அதன்பின்னர் நடக்கும் போட்டிகளிலும் நியூசிலாந்து வென்றாலும் அவர்களால் தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும்.