லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான போட்டியில் இந்தியாவின் காஷ்யப், இலங்கை வீரர் நிலுகா கருணரத்னே உடன் மோதினார்.
இரு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் முதல் ஆட்டத்தில் 20 நிமிடங்களில் 21-14 என்ற புள்ளி கணக்கில் ஆட்டத்தை இந்திய வீரர் காஷ்யப் கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் 2வது ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய காஷ்யப் 19 நிமிடங்களில் 15-21 என்ற புள்ளி கணக்கில் ஆட்டத்தை இழந்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது ஆட்டத்தில் 21 நிமிடங்களில் 21-9 என்ற புள்ளியில் காஷ்யப் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி போட்டிக்கு நுழையும் முதல் இந்திய பாட்மிண்டன் வீரர் என்ற சாதனையை காஷ்யப் படைத்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த 25 வயதாகும் காஷ்யப்பின் பயிற்சியாளர் முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரர் கோபிசந்த் என்பது குறிப்பிடத்தக்கது.