
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் பங்கேற்று வருகின்றனர். மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு போட்டி நடைபெறும் இடங்களுக்கு செல்ல, போட்டிகளில் கலந்து கொள்ள உதவியாளர்கள் தேவை.
எனவே இந்தியா வீரர்களுடன் 6 பயிற்சியாளர்களும், 5 உதவியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய பாராலிம்பிக்ஸ் விளையாட்டு துறை அறிவித்திருந்தது. மேலும் விளையாட்டு வீரர்களுடன் குடும்ப நபர்களும் உதவிக்கு அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் யாரும் இதுவரை பதக்கம் எதுவும் வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் வீரர்களுக்கு போட்டிகளின் போது உதவி செய்ய உதவியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து வில் சேரில் அமர்ந்த நிலையில் பளுத்தூக்கும் இந்திய வீரர் பார்மன் பாஷா கூறியதாவது,
போட்டிகளின் போது எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எனது பயிற்சியாளரை விளையாட்டு கிராமத்திற்குள் அனுமதிக்க போட்டி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். ஆனால் பெரிய பணக்காரர்கள் குடும்பத்துடன் வந்து இங்கு ஊர் சுற்றி பார்க்கின்றனர்.
நான் அதிகபட்சமாக 168 கிலோ எடையை தூக்கும் திறமை கொண்டவன். ஆனால் பாராலிம்பிக்ஸ் போட்டியில் என்னால் 150 கிலோ எடையை கூட தூக்க முடியவில்லை. ஒரு விளையாட்டு வீரரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், அவனால் எப்படி வெற்றி பெற முடியும் அல்லது பதக்கம் வெல்ல முடியும். இது ஒரு வருத்தம் அளிக்கும் சம்பவம் ஆகும் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வாரியத்தின் பொது செயலாளர் ரத்தன் சிங் கூறியுள்ளதாவது,
நான் எனது மகனை பாராலிம்பிக் போட்டியை பார்க்க அழைத்து வந்ததை குறித்து அனைவரும் கேள்வி கேட்கின்றனர். ஆனால் விளையாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் தங்களின் மனைவி மற்றும் மகளுடன் லண்டன் வந்துள்ளார். குடும்ப நபர்கள் அனைவரும் சொந்த செலவில் லண்டன் வந்துள்ளனர். எனவே இது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்றார்.