
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான உயரம் தாண்டுதலின் தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 34 வீராங்கனைகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனை சகானா குமாரி பி பிரிவில் இடம் பெற்றார்.
இதில் அதிக உயரம் தாண்டிய வீராங்கனைகள் வரிசைப்படுத்தப்பட்டனர். இதில் 'ஏ' பிரிவில் 7 வீராங்கனையும், 'பி' பிரிவில் 5 பேரும் தகுதி பெற்றனர். இந்திய வீராங்கனை சகானா குமாரி முதல் முயற்சியில் 1.80 மீட்டர் உயரத்தை தாண்டினார். ஆனால் அடுத்த 3 முயற்சிகளில் 1.85 உயரத்தை தாண்ட முடியாமல் திணறினார். இதனால் 'பி' பிரிவில் 15வது இடத்தை பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
தகுதி சுற்றில் உஸ்பெஸ்கிஸ்தான் வீராங்கனை வெட்லானா ராட்சிவில் 1.96 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்தார். அவருடன் மொத்தம் 12 வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். பெண்களுக்கான உயரம் தாண்டுதலின் இறுதிப் போட்டி வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூரை சேர்ந்த சகானா குமாரி 1.92 மீட்டர் உயரத்தை தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.