
52வது தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் (சீனியர் பிரிவு) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை காண வந்த முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சிறப்பாக ஆடி வருகிறார். மலேசியன் ஓபன் போல, ஒலிம்பிக் போட்டி அமையாது என்பது உண்மை தான். ஆனால் சாய்னா மனதளவில் அதிக வலிமை கொண்டவர். எனவே ஒலிம்பிக்கில் பதக்கம் பெற கடினமாக உழைத்து வருகிறார்.
அதேபோல இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களும், குத்துசண்டை வீரர்களும் ஒலிம்பிக் பதக்கம் பெற கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கூடுதல் பதக்கங்கள் கிடைக்கும் என்றார்.
பி.டி.உஷாவின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், டென்னிஸ் வீரர்கள் சானியா மிஸ்ரா, மகேஷ் பூபதி ஜோடி, பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் சாய்னா நேவால் சமீபத்தில் தாய்லாந்து மற்றும் மலேசியன் ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். எனவே லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கூடுதல் பதக்கங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.