தோஹாவில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
தோஹா: தோஹாவில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், 25 மீ ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் விஜய்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் 12வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கின்றது. இதில் நேற்று நடந்த ஸ்டாண்டர்டு பிஸ்டல் என்ற ஆண்களுக்கான தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின், விஜய்குமார், சீனாவின் ஜின் யோங்டே, ஜப்பானின் டோமோஹிரோ கிடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 572 புள்ளிகள் பெற்ற விஜய் குமார் தங்கப் பதக்கம் வென்றார். தசமக் கணக்கில் ஜின் யோங்டே 2வது இடத்தையும், ஜப்பானின் டோமோஹிரோ கிடா(568) 3வது இடத்தையும் பெற்றனர். விஜய்குமாரை தவிர இப்போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்களான சமரேஷ் ஜங் 16வது இடத்தையும், மகாவீர் சிங் 24வது இடத்தையும் பிடித்தனர்.
ஆண்களுக்கான 25 மீ ஸ்டாண்டர்டு பிஸ்டல் அணிகளின் மொத்த புள்ளிகளில், சீனா 1695 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தையும், தாய்லாந்து 1683 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், ஜப்பான் 1680 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இந்தியா 1666 புள்ளி பெற்று 5வது இடம் பிடித்தது.


Click it and Unblock the Notifications