சிட்னி: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இதன்மூலம் சூப்பர் சிக்ஸ் பிரிவுக்கு தகுதிபெற்றுள்ளது.பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்திய அணி லீக் சுற்றில் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் விளையாடி வந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.இதையடுத்து இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் சிக்சுக்குள் நுழைய இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. சிறப்பாக விளையாடிய மிதாலி ராஜ் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.மற்ற வீராங்கனைகள் விரைவாக அவுட்டாயினர். இந்திய பெண்கள் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 44.2 ஓவரில் 102 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது. இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது.இந்திய அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஏ பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுடன் விளையாட உள்ளது. வரும் 14ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 17ம் தேதி வெஸ்ட் இண்டீசுடனும், 19ம் தேதி நியூசிலாந்து அணியுடனும் மோதுகிறது. இந்த சுற்றில் சிறப்பாக விளையாடும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.