
இந்த ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி லண்டனில் ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வீரர்களுக்கான தேர்வு நடைபெற்று, இதில் தேர்வான வீரர்கள் பயிற்சி முகாம்களில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சி முகாம்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பயிற்சி முகாம்களில் ஆய்வு நடத்த மத்திய விளையாட்டு துறையின் சார்பில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் இந்திய நீச்சல் வீரர் கஜான் சிங், ஹரியானாவில் உள்ள சோனேபட் மல்யுத்த பயிற்சி முகாமல் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் கூறியதாவது
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு பயிற்சி முகாம்களில் அழுகிய பழத்தில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் கொடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும் வீரர்களுக்கான உணவுகள் சமைக்கப்படும் சமையலறை மிகவும் அசுத்தமாக உள்ளது.
சமையலறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்ய உணவு பொருட்கள் தர ஆய்வாளரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. சமையலறையில் அதிகளவில் கரப்பான் பூச்சிகள் உள்ளன. வீரர்களுக்கு சத்தான உணவு எதுவும் இங்கு வழங்கப்படுவதில்லை.
ஆனால் இது குறித்து வீரர்கள் யாரும் புகார் அளிப்பதில்லை. ஏனெனில் புகார் அளித்தால் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று வீரர்கள் பயப்படுகின்றனர். இந்த முகாமில் தான் முன்னணி மல்லயுத்த வீரர் சுஷில் குமார் போன்ற வீரர்கள் உள்ளனர். இதனையடுத்து முகாமில் இருந்த சமையல்காரரின் ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன் என்றார்.
உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முயன்று வரும் நிலையில், வீரர்களின் பயிற்சி முகாம்களின் மோசமான நிலையை கண்டு இந்திய விளையாட்டு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.