
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து டென்னிஸ், நீச்சல், ஹாக்கி, குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 13 போட்டிகளில் 80க்கும் மேற்பட்ட வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீரர்கள், நேற்று டெல்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக பிரமாண்டமான முறையில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் 4 வாரங்கள் உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற இவ்விழாவில் துப்பாக்கி சுடும் வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள், மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வெளிநாட்டில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ஹாக்கி அணியும், டென்னிஸ் அணியும் இன்றைய வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
விழாவில் லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது குறித்து தங்களின் கருத்துகளை வீரர்களும், வீராங்கனைகளும் பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி கூறியதாவது,
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்பது நான் வில்லையும், அம்பையும் கையில் எடுத்தது முதல் என் மனதில் எழுந்த கனவு. உலக வில்வித்தை வீராங்கனைகளின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருப்பதில் எனக்கு திருப்தி இல்லை. இதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
வில்வித்தை போட்டியில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டால் கூட புள்ளிகளில் பெரிய வித்தியாசத்தை அளித்துவிடும். எனவே இதனை தவிர்க்க கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். வில்வித்தை பொறுத்த வரை சீனா மற்றும் கொரியா நாட்டு வீராங்கனைகளால், எனக்கு அதிக நெருக்கடி ஏற்படலாம் என்றார்.
இது குறித்து துப்பாக்கி சுடும் வீரரான மனவ்ஜீத் சிங் சாது கூறியதாவது,
முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் போது, நமது திறமைகளை வெளிப்படுத்தும் முன், நமது மனத்தில் ஏற்படும் பயத்தை கட்டுபடுத்துவது தான் முக்கியம். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், மாதமும், வருடமும் பல மாறுதல்களை கொண்டது.
கடந்த 12 ஆண்டுகளாக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு வரும் நான், பல தரமான வீரர்களை பார்த்துள்ளேன். இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக எளிதாக உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை காட்டிலும் தற்போது இந்திய வீரர்களின் திறமை வளர்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான அதிக பயிற்சியில் ஈடுபட வேண்டியுள்ளது என்றார்.
இந்திய குத்து சண்டை வீராங்கனை மேரி கேம் கூறியதாவது,
கடந்த 12 ஆண்டுகள் உழைப்பிற்கு பிறகு முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனது வளர்ச்சிக்கு பின்னால், எனது கணவரின் உழைப்பும் அடங்கி உள்ளது என்றார்.
முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை இந்திய ஒலிம்பிக் அணியின் விளம்பர நிறுவனமான சாம்சங் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வெல்லும் வீரருக்கு ரூ.20 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரருக்கு ரூ.15 லட்சமும், வெங்கலப்பதக்கம் வெல்லும் வீரருக்கு ரூ.10 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.