லண்டன் ஒலிம்பிக்: ஜூடோ போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே இந்திய வீராங்கனை

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளை சேர்ந்த 81 பேர் பங்கேற்க உள்ளனர். பெண்களுக்கான ஜூடோ போட்டியில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
மீரட்டை சேர்ந்த 22 வயதாகும் ஜூடோ வீராங்கனை கரீமா செளத்ரி தான் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக விளையாட போகிறார். உலக ஜூடோ தரவரிசையில் 88வது இடத்தில் உள்ள இவர், சமீபகாலமாக நடைபெற்ற பல போட்டிகளில், முன்னணி ஜூடோ வீராங்கனைகளை வீழ்த்தி உள்ளார். 63 கிலோ கொண்டவர்களுக்கான ஜூடோ போட்டியில் பங்கேற்க உள்ள கரீமா செளத்ரிக்கு, ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததன் மூலம் ஒரு பெரிய இலக்கை அடைந்ததாக உணருகிறேன். ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தை பெற்று நாடு திரும்பும் கனவுடன் உள்ளேன். எனது எடை பிரிவில் மொத்தம் 24 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜூடோ உலக கோப்பைக்கான தொடரில் ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி உள்ளேன். அவர்கள் அனைவரும் லண்டனில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்னை பொறுத்த வரை ஒலிம்பிக் போட்டியும், ஒரு விளையாட்டு போட்டி தான். இதனால் அதில் பங்கேற்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. எனக்கு எதிராக களமிறங்க உள்ள மற்ற நாட்டு வீராங்கனைகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்த வீடியோவில் பார்த்து தெரிந்து வைத்துள்ளேன். எனவே அவர்களை எப்படி வீழ்த்தலாம் என்பது எனக்கு தெரியும். எனவே எனக்கு எந்த மனஅழுத்தமும் இல்லை.
இந்தியாவில் இருந்து ஜூடோ போட்டிக்காக செல்லும் ஒரே வீராங்கனை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். எதிர் தரப்பில் இருந்து வரும் தாக்குதலுக்காக காத்திருந்து, பின்னர் தாக்கும் கலையை நான் தெளிவாக கற்றுள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications