நாக்பூர்: எனக்கு தேர்வாளர்களில் சிலர் அநீதி இழைத்து விட்டனர். அடுத்தடுத்து 9 முறை நான் அருமையாக விளையாடியும் கூட என்னைத் தேர்வு செய்யாமல் அநீதி இழைக்கப்பட்டது என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் வினோத் காம்ப்ளி.சச்சினின் பள்ளித் தோழர் காம்ப்ளி. சச்சின் விளையாட வந்த அடுத்த ஆண்டிலேயே காம்ப்ளியும் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனக்கென தனி ஸ்டைலைக் கொண்டிருந்த காம்ப்ளி மிகக் குறுகிய காலமே விளையாட்டில் நீடித்தார்.அதன் பின்னர் அவரை ஏனோ தேர்வாளர்கள் ஓரம் கட்டி ஒதுக்கி விட்டனர்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட காம்ப்ளி, எனது நண்பராக இருந்தும் சச்சின் என்னைக் கைவிட்டு விட்டார் என்று கூறியிருந்தார்.அதேபோல எனது ஜாதி, நிறத்தைப் பார்த்து தேர்வாளர்கள் நடந்து கொண்டனர் என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.ஆனால் நான் சச்சினை விமர்சிக்கவில்லை. அவரை விமர்சிக்க என்னால் முடியாது என்று பின்னர் மறுத்திருந்தார் காம்ப்ளி.இந்த நிலையில் இன்று நாக்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த காம்ப்ளி தேர்வாளர்கள் மீதான தனது புகாரை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.அப்போது அவர் கூறுகையில், தேர்வாளர்கள் எனக்கு அநீதி இழைத்தது உண்மை. ஒருமுறை, இருமுறை அல்ல, 9 முறை எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் நான் சிறப்பாகவே விளையாடினேன். ஆனால் என்னைத் தேர்வு செய்யாமல் புறக்கணித்தனர்.சச்சின் கேப்டனாக இருந்தபோது, நான் அணியில் சேர்க்கப்பட்டபோது, தேர்வாளர்கள் சச்சினிடம், உங்களது நண்பர் என்ற ஒரே காரணத்திற்காகவே காம்ப்ளி அணியில் இடம் பெறுகிறார் என்று கூறினர்.எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நான் விரைவில் வெளிப்படுத்துவேன்.ஆனால் சச்சின் அதை மறுத்து, திறமை மற்றும் தகுதி காரணமாகவே காம்ப்ளி அணியில் இடம் பெறுகிறார் என்று கூறினார்.நான் இன்னும் கிரிக்கெட்டை விட்டு விடவில்லை. எனக்குள் இன்னும் கிரிக்கெட் உள்ளது என்றார் அவர்.