
ரஞ்சி சாம்பியனான மும்பை அணிக்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 6-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா 526 ரன்களும், மும்பை 409 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் 5 விக்கெட்டுக்கு 389 ரன்கள் சேர்த்து ரெஸ்ட் ஆப் இந்தியா டிக்ளேர் செய்தது. அம்பத்தி ராயுடு 156 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி இரானி கோப்பையைக் கைப்பற்றியது.
53 ஆண்டு கால இரானி கோப்பை போட்டிகளில் ரெஸ்ட் ஆப் இந்தியா 25-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 2006-07-ல் இருந்து தொடர்ச்சியாக 8 முறையாக கோப்பையை தக்க வைத்திருக்கிறது.