சென்னை: இந்திய அணி மிகக் கேவலமான முறையில் ஆடி வருவதால் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். அவரை நீக்க இதுதான் சரியான தருணம் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்திய அணி உலகக் கோப்பைக்குப் பின்னர் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தபடியே உள்ளது. இதற்கு யார் காரணம், யார் பொறுப்பு என்பது சுத்தமாக தெரியவில்லை. காரணம், பொறுப்பேற்க ஒருவரும் முன்வரவில்லை.
பயிற்சியாளர் பிளட்சர் வாயே திறப்பதில்லை. கேப்டன் டோணியோ மகா பொறுமையாக இருக்கிறார்கள். மூத்த வீரர்கள் யாரும் தோல்விகள் குறித்து விலாவாரியாக பேசுவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து சொல்வதே இல்லை. தேர்வாளர்களோ, வெயிட் அன்ட் சீ என்று வெளங்காதது போலவே பேசுகிறார்கள்.
ஆனால் பயிற்சியாளர் பிளட்சருக்குத்தான் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவரை தூக்க இதுதான் சரியான தருணம் என்று அனைவருமே பேச ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடத்தில் இந்தியா 10 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ஏளது. 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. இங்கிலாந்திடம் மட்டும் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் ஆறு போட்டிகளை இழந்துள்ளது.
அது மட்டுமல்ல, இந்த ஆண்டு நடந்த இரண்டு ஒரு நாள் போட்டித் தொடர்களில் மிகவும் மோசமான முறையில் தோற்று வெளியேறியுள்ளது. டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் மோசமான முறையில் ஆடியது. வங்கதேசத்திடம் போய் தோற்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அதன் பின்னர் மிகப் பெரிய சரிவை நோக்கிப் போய் விட்டது. தற்போது 5வது இடத்தில் இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோது என்னென்ன பெருமையெல்லாம் கிடைத்ததோ அத்தனையையும் தற்போது கீழே போட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருகிறது இந்தியா.
டங்கன் பிளட்சரால் இந்திய அணிக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.