ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வெற்றியை பறிகொடுத்த இந்தியா, இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின். முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. சோயப் மாலிக் 128 ரன்கள் விளாசினார்.அடுத்து பேட் செய்த இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. டிராவிட் 76, கம்பீர் 56 ரன்கள் எடுத்தனர்.இதையடுத்து இந்திய அணி அரையிறுதி தகுதிபெற அடுத்து நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.இந்நிலையில் இந்திய அணி இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்தி கொண்டு இந்திய வீரர்கள் இதில் சிறப்பாக செயல்படுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.யூசுப் பதானுக்கு பதில் அமித் மிஸ்ரா...இந்நிலையில் இந்த போட்டிக்கான அணித் தேர்வு குறித்து கேப்டன் டோணி கூறுகையில்,கூடுதலாக ஒரு பவுலருடன் களமிறங்கினால் நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும். பவுலர்கள் அதிக ரன்களை விட்டு கொடுப்பதால் பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றனர்.யூசுப் பதானுக்கு திறமை அதிகமிருக்கிறது. உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சூப்பராக விளையாடுகிறார். ஆனால், சர்வதேச அளவில் வரும் போது தனது முழு திறமை வெளிப்படுத்த தவறிவிடுகிறார் என்றார்.இதையடுத்து பாகிஸ்தான் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஆர்பி சிங், யூசுப் பதான் ஆகியோருக்கு கல்தா கொடுக்கப்பட்டு பிரவீண் குமார், அமித் மிஸ்ரா சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து...நேற்று நடந்த லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு ஓவைஸ் ஷா, கோலி்ங்வுட் ஜோடி கைகொடுத்தது. ஓவைஸ் ஷா 89 பந்தில் 98 ரன்கள் எடுத்து, சத வாய்ப்பை 2 ரன்களில் நழுவவிட்டார். கோலிங்வுட் 82 ரன்கள் எடுத்தார்.அடுத்து வந்த இயாய்ன் மார்கன் 5 சிக்சர் உட்பட 34 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்தது. அடுத்த பேட் தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.இலங்கையை வென்றது நியூசி...மற்றொரு போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து. அடுத்து ஆடிய இலங்கை 46.4 ஓவரில் 277 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.