டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தத் தடை குறித்து சற்றும் கவலைப்படாமல், சங்கோஜப்படாமல், ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடித்து காக்டெய்ல் பார்ட்டி வைத்து அதைக் கொண்டாடியும் முடித்துள்ளனர் புதிய நிர்வாகிகள். அந்த பார்ட்டியில் சுரேஷ் கல்மாடியும் கலந்து கொண்டார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல், மத்திய விளையாட்டுத்துறையின் விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.
இது இந்திய விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா விளையாட முடியாதபடி தடைகள் வரப் போவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் திட்டமிட்டபடி இந்திய ஒலிம்பிக் சங்கம் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. புதிய தலைவராக அபய் சிங் செளதாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தலை முடித்த கையோடு டெல்லி இம்பீரியல் ஹோட்டலில் நேற்று ராத்திரி விடிய விடிய விருந்து வைத்து களேபரப்படுத்தியுள்ளனர் சங்க நிர்வாகிகள். பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்ச்சியில் மது விருந்தும், இரவு விருந்தும் அடக்கம்.
விருந்துக்கு வந்தவர்களில் முக்கியமானவர் காமன்வெல்த் போட்டி ஊழல் புகழ் சுரேஷ் கல்மாடி. புதிய தலைவர் செளதாலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்படி தடை குறித்துக் கவலைப்படாமல் தேர்தல் அதைத் தொடர்ந்து மது விருந்து என்று இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் படு நிதானமாக இருப்பது இந்திய விளையாட்டுத்துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.