
கேரளாவை சேர்ந்தவர் பி.குன்ஹூமுகமது. சிறந்த தடகள வீரரான இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அதேபோல கேரளாவை சேர்ந்த ஜோசப்.ஜி.ஆப்ரஹாம் ஆசிய போட்டியில் 400 மீட்டர் தடையோட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
இருவரும் இன்று இலங்கையில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தடகள தகுதிப் போட்டியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்கான அனுமதி சீட்டை பெற்ற இருவரும் இலங்கை செல்ல விமான டிக்கெட் எடுக்க ரூ.30 ஆயிரம் பணம் தேவைப்பட்டது. ஆனால் இருவரிடமும் பணம் இல்லாமல், ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இது குறித்து குன்ஹூமுகமது கூறியதாவது,
கேரளாவில் உள்ள பலரிடமும் சென்று நான் பணம் கேட்டேன். ஆனால் எனக்கு பணம் தர யாருமே முன்வரவில்லை. எனது வங்கி கணக்கில் வெறும் ரூ.9 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதனால் விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றார்.
இது குறித்து இந்திய தடகள சங்கத்தின் செயலாளர் சி.கே.வல்சன் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பது எங்களுக்கு தெரியும். இதற்காக குன்ஹூமுகமது மற்றும் ஜோசப் ஆகியோரின் அனுமதி சீட்டை பெற்று கொடுத்தோம். ஆனால் அவர்கள் இருவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை என்று தற்போது தெரிவித்துள்ளனர் என்றார்.
இது குறித்து தேசிய தடகள உதவி பயிற்சியாளர் லிஜோ தோட்டன் கூறியதாவது,
குன்ஹூமுகமது மற்றும் ஜோசப் ஆகிய இருவரும் எனக்கு கடந்த 2 நாட்களுக்கு போனில் தொடர்பு கொண்டனர். அப்போது இலங்கையில் நடைபெற்ற உள்ள லண்டன் ஒலிம்பிக் தகுதி போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பணம் இல்லாததால், கொழும்புவிற்கு செல்லும் விமானத்தில் செல்ல முடியாமல் தவிப்பதாக தெரிவித்தனர்.
இருவருக்கும் உதவும் வகையில், விளையாட்டு துறை தலைவர், அதிகாரிகள் என்று பலதரபட்டவர்களிடம் தடகள வீரர்களின் சூழ்நிலையை எடுத்து கூறினேன். ஆனால் யாரும் நிதியுதவி செய்ய முன்வரவில்லை.
இது குறித்து விசாரித்த போது, தடகள வீரர்களின் இது போன்ற அவசர தேவைகளுக்கு நிதியுதவி வழங்க, விளையாட்டு அமைப்பில் நிதி சேமிப்பு எதுவும் இல்லை என்று தெரியவந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுள்ள இரு தடகள வீரர்கள், ரூ.30 ஆயிரம் பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தது வருந்ததக்கது. தடகள வீரர்களுக்கு நேரிடும் இது போன்ற துயர சம்பவங்களை தவிர்க்க, நம் நாட்டு விளையாட்டு அமைப்பில் மாற்றம்
கொண்டு வர வேண்டும் என்றார்.