
லண்டன் ஒலிம்பிக் 2012 வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்காக 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூடோ, மாரத்தான், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பளு தூக்குதல் ஆகிய போட்டிகளில் லிபியாவை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் லிபியா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் நாபில் அல் ஆலம் நேற்று கடத்தப்பட்டுள்ளார். திரிபோலி நகரின் மத்திய பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்த அவரை துப்பாக்கி உடன் வந்த மர்மநபர்கள் மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். நாபில் அல் ஆலம் தற்போது ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்ட பிறகு, உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 12க்கும் மேற்பட்ட கும்பலை சேர்ந்தவர்கள், மத்திய ஆட்சியாளர்களின் வேண்டுகோளை புறக்கணித்து, தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏதாவது ஒரு கும்பல் மூலம் நாபில் அல் ஆலம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து நாபில் அல் ஆலம் இருந்த அலுவலகத்தின் தலைவர் அராபத் ஜூவான் கூறியதாவது,
லிபியா ராணுவத்தின் உடையணிந்து வந்த 9 பேர், நாபில் அல் ஆலம் பயணித்த காரை தடுத்து நிறுத்தினர். துப்பாக்கி முனையி்ல் அவரை அதிலிருந்து இறக்கி, ரகசியமான இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை.