இந்தியாவுக்கு 4வது பதக்கம்: இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இதுதான் 'பெஸ்ட்'!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்தியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்றார். இதுவே லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். அதன்பிறகு 25 மீ்ட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டார். இதில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய அவருக்கு, வெண்கலப் பதக்கம் உறுதியானது. இருப்பினும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை நிகோலா ஆதம்ஸிடம் தோல்வியை தழுவிய மேரி கோம் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உட்பட மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்த அதிகபட்சமாக பதக்கங்கள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் மேரி கோம் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 3வது இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக கடந்த 2000ம் ஆண்டு சிட்டி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லீஸ்வரியும், லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவாலும் பதக்கம் வென்றுள்ளனர். மேற்கண்ட 3 இந்திய வீராங்கனைகளும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications