டெளவ் ஸ்பான்சரை கைவிட முடியாது-ஒலிம்பிக் கமிட்டி
லண்டன்: 2012-ம் ஆண்டில் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான டெளவ் நிறுவனத்தின் ஸ்பான்சரை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்து விட்டது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த மனிதப் பேரவலமான போபால் விஷவாயு கசிவு நிறுவனத்தோடு தொடர்புடையது டெளவ் நிறுவனம். போபால் விஷ வாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை டெளவ் நிறுவனம்தான் வாங்கியுள்ளது.
இதனால் டெளவ் நிறுவனத்தின் ஸ்பான்சருக்கு உலகின் பல்வேறு நாட்டு சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரான மெரிடித் அலெக்ஸாண்டர் டெளவ் நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கமிட்டியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும் 12 பேர் கொண்ட கமிட்டியில் ஒரே ஒருவர் மட்டுமே விலகிவிட்டதாலேயே டெளவ் நிறுவனத்தின் ஸ்பான்சரை நிராகரிக்க முடியாது என்று ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இத்தகைய சர்ச்சைகளால் டெளவ் நிறுவனத்துக்கு ஸ்பான்சர் கொடுக்கப்பட்ட விவகாரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications