
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 80 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் வில்வித்தை போட்டியில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 3 வீரர்களும், 3 வீராங்கனைகளும் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தீபிகா குமாரி, லைஷ்ராம் பம்பாய்லா தேவி, சிக்ரவோலு ஆகிய வீராங்கனைகளும், ஜெயந்தா தாலூக்தார், தரூண்தீப் ராய், ராகுல் பானர்ஜி ஆகிய வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
தற்போது வில்வித்தை வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தீபிகா குமாரி, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் கொரியா வீராங்களால் இவருக்கு அதிக நெருக்கடி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை தனது கனவாக கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருவதாக தீபிகா குமாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளர் லிம்பா ராம் கூறியதாவது,
கடந்த 2004ம் ஆண்டு ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக தான் இருந்தது. ஆனால் நுழையிழையில் நமக்கு கிடைக்க இருந்த பல பதக்கங்களை இழந்தோம். கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் பணியாற்றி வருவதால், இந்த முறை நமக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதற்காக ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக, லண்டன் செல்ல தீர்மானித்து உள்ளோம். இதன்மூலம் லண்டனில் நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப இந்தியர்களால் இயங்க முடியும். வில்வித்தை போட்டியை பொறுத்த வரை காற்று வீசுவது அனைவரும் பிரச்சனையை ஏற்படுத்த கூடியதே. ஒரு வீரர் காற்று வீச்சு தனக்கு சாதகமாக்கி அம்பை எய்யும் திறமையை வளர்த்து கொண்டால், அவரை வீழ்த்தவே முடியாது என்றார்.