
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலை கோலகலமான துவக்க விழாவுடன் துவங்கியது. இந்த நிலையில் நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான வில்வித்தை போட்டியில், 12 அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் தலா 72 அம்புகளை எய்தனர்.
போட்டியின் முடிவில் தென் கொரியாவின் போ பாய் கி 671 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். அதே புள்ளியுடன் தென் கொரிய வீரர் சங் ஜின் லீ 2வது இடத்தை பிடித்தார். இந்தியாவின் தீபிகா குமாரி 662 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தார்.
இந்தியாவின் பம்பாய்லா தேவி 651 புள்ளிகளுடன் 22வது இடத்தையும், சக்ரோவோலு ஸ்வரோ 625 புள்ளிகளுடன் 50 இடத்தையும் பிடித்தார். மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு (1938 புள்ளிகள்) 9வது இடம் கிடைத்தது. இதன் மூலம் அடுத்த சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த அணியுடன் இந்தியா மோத உள்ளது.
தனி நபர் போட்டியில் 8வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி, இங்கிலாந்தை சேர்ந்த அமி ஒலீவரை சந்திக்க உள்ளார். மேலும் இந்தியாவின் பம்பாய்லா, கிரீஸ் வீராங்கனை இவாஞ்லியா சாராவை சந்திக்க உள்ளார். 50வது இடத்தை பிடித்த சக்ரோவோலு, அமெரிக்காவின் ஜெனீபர் நிக்கோலஸை சந்திக்க உள்ளார்.