
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிசுற்று போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 40 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 7 வீராங்கனைகள் கொண்ட 2வது பிரிவில் இந்திய வீராங்கனை டின்டு லுகா சேர்க்கப்பட்டு இருந்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள், அரையிறுதியில் பங்கேற்க தகுதி பெறுவர். இந்த நிலையில் 2வது பிரிவின் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷவினோவா 2.01.56 நிமிடங்களில் ஓட்டத்தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
ஓட்டத்தூரத்தை 2.01.65 நிமிடங்களில் கடந்த அமெரிக்க வீராங்கனை ஆலிஸ் ஸிமிட் 2வது இடத்தை பிடித்தார். இந்திய வீராங்கனை டின்டு லுகா 2.01.75 நிமிடங்களில் ஓட்டத்தூரத்தை கடந்து 3வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் 3 பேரும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதேபோல மொத்தம் 6 பிரிவுகளை சேர்ந்த மொத்தம் 24 வீராங்கனைகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.