லண்டன்: ஒலிம்பிக் போட்டியின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், பாலிவுட் படங்களில் வரும் காமெடி காட்சிகளை பார்ப்பதாக இந்திய வில்வித்தை அணியினர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது. 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 81 பேர் பங்கேற்கின்றனர்.

இது குறித்து இந்திய வில்வித்தை வீராங்கனை பம்பாய்லாதேவி கூறியதாவது,
மனஅழுத்தத்தை குறைக்க நாங்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகிறோம். இதில் காமெடி சினிமாக்களை பார்ப்பது ஒரு முறை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன் காமெடி படங்களை பார்த்துவிட்டு செல்வதன் மூலம், மனஅழுத்தம் குறைந்து, சிறப்பாக விளையாட முடியுது.
இளம் வீராங்கனையான சேக்ரோவாலு ஸ்வ்ரோ எளிதில் கோபப்படக்கூடியவர். ஆனால் அதே வேகத்தில் சாந்தமாகிவிடுவார். தீபிகாகுமாரி விவாதம் செய்யாமல், அமைதியாக இருந்து கவனித்து செயல்படுவார். நாங்கள் அனைவரும் சுமூகமாக பழகி வருகிறோம்.
ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது. இந்திய அணியில் உள்ள நாங்கள் இணைந்து ஒரு குடும்பம் போல செயல்படுகிறோம். எங்களுக்குள் மூத்தவர், இளையவர் என்ற பாகுபாடு எதுவும்.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் முதல் நபராக தீபிகா குமாரி அம்பை எய்வார். அதன்பிறகு சேக்ரோவாலு ஸ்வ்ரோ போட்டியில் பங்கேற்பார். கடைசியாக நான் அம்பை எய்வேன் என்றார்.