
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளன. பல நாடுகளை சேர்ந்த அணியினர் தங்குவதற்காக, சகல வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் லண்டன் நகருக்கு வந்து குவிந்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும அமெரிக்கா நாடுகளை சேர்ந்த அணியினர் லண்டனுக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர்.
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு விரைவில் சென்றுவிடலாம். ஆனால் ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் உட்பட 30 பேரை ஏற்றி வந்த சொகுசு பஸ்சை ஓட்டிய ஓட்டுநர் வழித் தெரியாமல் தவித்தார்.
இதனால் பாக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட் ஹம் தெருவின் பின்புறம் வழியாக செல்ல வேண்டிய பஸ்சை, வேறு வழியாக இயக்கினார். இதனால் சுமார் 3.30 மணிநேரம் லண்டன் நகரை சுற்றி திரிந்த அந்த பஸ், பின்னர் ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைந்தது.
அதேபோல அமெரிக்க வீரர்கள், வீராங்கனைகள் பயணித்த சொகுசு பஸ்சை ஓட்டிய ஓட்டுநரும், வழி தெரியாமல் சுமார் 4 மணிநேரம் லண்டன் நகரை சுற்றி காட்டினார். 23 மைல்கள் சுற்றிய பிறகு, அமெரிக்க அணியினர் ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைந்தனர்.
இது குறித்து ஒலிம்பிக் போட்டிக்கான போக்குவரத்து கமிஷனர் பீட்டர் ஹென்ரி கூறியதாவது,
ஒலிம்பிக் கிராமத்திற்கு வீரர்களை அழைத்து வந்த பஸ்கள் வழி தவறி 4 மணிநேரம் சுற்றி திரிந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை என்றால், ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்லாமல், செளத்என்ட் பகுதிக்கு பஸ் சென்றிருக்கலாம். மேலும் 4 மணி நேரம் அப்பகுதியில் சுற்றி திரிந்தால், இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகள் முழுவதையும், அவர்கள் பார்த்திருக்கலாம் என்றார்.