
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். லண்டன் சூழல்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ளும் வகையில், பல நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டி துவங்கும் முன்னதாகவே லண்டன் வந்து சேர்ந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக, லண்டனில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கழிவறை வசதிகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் சில இடங்களில் ஒரே கழிவறையை 4 வீரர்கள் பகிர்ந்து கொண்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. சில இடங்களில் ஒரே கழிவறையை 6 பேர் கூட பயன்படுத்துகின்றனர். இதனால் பயிற்சிக்கு செல்லும் வீரர்கள், வீராங்கனைகள் தங்களின் நேரத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய அணியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
உலகின் மிக பெரிய விளையாட்டு போட்டியில் இது போன்ற பிரச்சனை எழுந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை என்றார்.
இது குறித்து இந்திய குத்துச்சண்டை வீரர் ஒருவர் கூறியதாவது,
ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வசதி குறைவை சுட்டி காட்டி, கூடுதல் கழிவறை உள்ள அறையை நாம் கேட்க முடியாது. எனவே வேறு வழியில்லாமல் கிடைத்த வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் போட்டிகள் துவங்கும் போது, இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்றார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஒருவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்காக அமைக்கப்பட்ட கிராமத்தில் கூட இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை. கழிவறைக்கு செல்ல யாரும் அங்கு வரிசையில் நிற்கவில்லை என்றார்.
இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன், டுவிட்டர் இணையதளத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பேசினேன். லண்டனை விட டெல்லி காமன்வெல்த் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட கிராமத்தில் சிறப்பான வசதிகள் இருந்ததாக தெரிவித்தனர் என்று தெரிவித்துள்ளார்.