டெல்லி: பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, சூப்பர் 6ல் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது திருப்புமுனையாக அமைந்தது. இது இந்தியாவின் கோப்பை கனவை பறித்து கொண்டது என்கிறார் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் ஜூலன் கோஸ்வாமி.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து, நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய கேப்டன் ஜூலன் கோஸ்வாமி கூறுகையில், நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 6 போட்டியில் நமது வீராங்கனைகள் படுமோசமாக பீல்டிங் செய்தார்கள். இதனால் நாம் தோல்வியடைய நேரிட்டது. இது திருப்புமுனையாக அமைந்து, கோப்பை கனவை பறித்து கொண்டது. ஆனால், அடுத்து நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய போதிலும் நமக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம்...கடந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுடன் பைனலில் தோற்றோம். ஆனால், இம்முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டு முறை வீழ்த்தியது ஆறுதல் அளிக்கிறது.ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மெக்ராத் மற்றும் பிரட் லீயை சந்தித்தது உற்சாகம் அளித்தது. உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதை அடுத்து ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்து நடக்கவிருக்கம் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவோம். அதில் கோப்பை வெல்வதே எங்கள் லட்சியம் என்றார் ஜூலன் கோஸ்வாமி.