
ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில்தான் அமெரிக்கா பெருமளவில் பதக்கங்களை வாரிக் குவிக்க காத்திருக்கிறது. பெரும் பெரும் ஜாம்பவான்கள் நரம்பு புடைக்க, ரத்தம் தெறிக்க டிராக்கை சூடாக காத்துள்ளனர்.
இந்தியாவும் இந்த முறை தடகளத்தில் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்காதா என்ற ஆசையுடன் வந்திருக்கிறது. மொத்தம் 14 பேர் இந்த முறை டிராக் அன்ட் பீல்ட் என்று கூறப்படும் தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இவர்களில் டிங்கு லூகா மீது அதிக வெளிச்சம் காணப்படுகிறது. காரணம், இவர் பி.டி.உஷாவின் நேரடி சிஷ்யை ஆவார். 800 மீட்டர் ஓட்டத்தில் இவர் கலந்து கொள்கிறார். புயல் போல ஓடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டும் போட்டியில் மயூக்கா ஜானி மீது எதிர்பார்ப்பு உள்ளது. ரஞ்சித் மகேஸ்வரியும் இதில் பங்கேற்கிறார். தேசிய அளவில் இவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்ந்தாலும் கூட சர்வதேச அரங்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.
ஸ்டீபிள் சேசர் பிரிவில் சுதா சிங் சற்று நம்பிக்கை தருவதாக உள்ளார். இவர் கென்யா மற்றும் இத்தாலியில் கடும் பயிற்சி பெற்றுத் தயாரானவர். எனவே இவர் ஏதாவது சாதனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நீளம் தாண்டுதல் போட்டியில் சஹானா குமாரி இருக்கிறார். ஷாட்புட்டில் ஓம் பிரகாஷ் கர்ஹானா போட்டியிடுகிறார்.
நடைப் போட்டியில் குர்மீத் சிங், பல்ஜீந்தர் சிங், கே.டி.இர்பான் ஆகியோர் தங்களது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்க்கவுள்ளனர். இவர்கள் மூவரும் 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் பங்கேற்கின்றனர். 50 கிலோமீட்டர் பிரிவில் பசந்த் பஹதூர் ரானா பங்கேற்கிறார்.