ஷாருக்கானை வாங்கடே ஸ்டேடியத்திற்குள் விடாதீர்கள்... மும்பை கிரிக்கெட் சங்கம்
மும்பை: இந்தி நடிகரும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கானை மும்பை வாங்கடே மைதானத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று மும்பை காவல்துறைக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியைக் காண ஷாருக் கான் வரலாம் என்றஎதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அவர் வாங்கடே மைதானத்திற்குள் நுழைய தடை உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இந்த மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது அவர் மைதான பாதுகாவலர்களுடன் சண்டைக்குப் போனதால் ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தடை விதித்தது மும்பை கிரிக்கெட் சங்கம்.

வந்தா சுட்ருவாங்களோ?
இந்த நிலையில் இந்த தடை குறித்து சமீபத்தில் ஷாருக் கான் கருத்து தெரிவிக்கையில், ஒரு வேளை தடையை மீறி நான் உள்ளே போனால் என்ன துப்பாக்கியால் சுட்ருவாங்களோ என்று கேட்டிருந்தார் ஷாருக் கான்.

உள்ளே விடாதே... மும்பை கிரிக்கெட் சங்கம்
இதையடுத்து தற்போது மும்பை காவல்துறைக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது ஷாருக் கானை வாங்கடே ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு அது கோரிக்கை விடுத்துள்ளது.

போலீஸ் கேட்டதால் கோரிக்கை
இதுகுறித்து சங்கத் தலைவர் ரவி சாவந்த் கூறுகையில், இதுபோல ஒரு கடிதம் கொடுக்குமாறு போலீஸ் தரப்பில் கூறியிருந்தனர். எனவேதான் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பினோம். மெரைன் லைன்ஸ் போலீஸ் நிலையத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் சாவந்த்.

ஷாருக் தரப்பு நியாயம் என்ன?
வாங்கடே ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டு நடந்த மோதல் குறித்து ஷாருக் கான் கூறுகையில், அது என்னுடைய தவறு அல்ல. காவலர்கள், எனது குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அதை நான் தட்டிக் கேட்டேன். அவ்வளவுதான். மற்றபடி நான் தகராறு ஏதும் செய்யவில்லை என்று கூறியிருந்தார் ஷாருக் கான்.
மொத்தத்தில் வாங்கடே ஸ்டேடியத்திற்கு ஷாருக் கான் வருவாரா.. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications