
லண்டன் ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் இவர் பங்கேற்கும் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று நாடு திரும்பினார்.
அவருக்கு மகாராஷ்டிரா விளையாட்டு மற்றும் இளைஞர் நலவாரியம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ககன் நரங், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைக்காமல் போனது, தனது தாயாருக்கு வருத்தம் ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை நான் லண்டனில் சந்தித்து பேசினேன். அவர் பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அவர் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவார் என்று நானும் நம்பினேன். ஆனால் வெண்கலப்பதக்கமே கிடைத்தது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் போது எனக்கு லேசான பயம் இருந்தது. இதனால் போட்டியில் அரைமணி நேரம் தாமதமாகவே பங்கேற்றேன். எனது பயத்தை போக்க ஐபேட் மூலம் பயிற்சி மேற்கொண்டேன். போட்டி துவங்கும் முன் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்தேன். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போது, மகிழ்ச்சி அடைந்தேன். இறுதிப் போட்டியில் நான் பயமில்லாமல் செயல்பட்டதால், வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கு பயிற்சி பெற அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அனைவருக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சாதிக்க முடிவதில்லை. ஆனால் இந்திய அரசு அளித்த உதவிகள் மூலம் நான் உட்பட பலரும் பதக்கம் வெல்ல முடிந்தது. இதற்கு உதவிய ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று எனது தாயார் எதிர்பார்த்தார். ஆனால் வெண்கலப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது. இதனால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்தார். அவருக்காக எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என்றார்.