
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் பிடிபட்ட அனூப்சிங் கலோன், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர்சிங், அவரது நண்பர் ராம்சிங் ஆகியோருக்கும் தாம் ஹெராயின் போதைப் பொருள் கொடுத்ததாக கூறியிருந்தான். இதைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார் விஜேந்தர்சிங்கின் நண்பர் ராம்சிங்கிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜேந்தர்சிங் 12 முறை ஹெராயினை பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து விஜேந்தர்சிங்கிடம் உடனடியாக ஊக்க மருந்து தடுப்பு சோதனை நடத்த வேண்டும் என்று ஊக்க மருந்து தடுப்பு கழகத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
ஆனால் விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலை தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அந்த கழகத்தின் இயக்குனர் ஜெனரல் முகுல் சட்டர்ஜி கூறுகையில், விஜேந்தர்சிங், ஹெராயின் போதைபொருள் பயன்படுத்தினாரா? என்ற பரிசோதனையை நாங்கள் நடத்தப்போவதில்லை. தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் மற்றும் உலக ஊக்கமருந்து தடுப்பு கழகம் இவற்றின் விதிகளின்படி நாங்கள் நடப்போம். நாங்கள் ஒரு சுதந்திரமான அமைப்பு. எனவே மத்திய விளையாட்டு அமைச்சகம் என்ன சொன்னது என்பதை பற்றி கவலைப்படாமல், போட்டி இல்லாத காலத்தில் ஒரு வீரருக்கு சோதனை நடத்துவது குறித்த விஷயத்தில் எங்களது மரபினை கண்டிப்பாக கடைபிடிப்போம். ஒரு குறிப்பிட்ட வீரர், வீராங்கனையிடம் எப்போது, எங்கு ஊக்கமருந்து சோதனை நடத்துகிறோம் என்பதை நாங்கள் ஒரு போதும் வெளியிடுவதில்லை. உலக ஊக்கமருந்து தடுப்பு கழகம் அதனை தடை செய்துள்ளது. அவருக்கு நாங்கள் கடைசியாக 2012-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் சோதனை செய்தோம். அந்த சோதனையில் அவர் ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது என்றார் அவர்.
ஆனால் இது பற்றி கருத்து தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் பி.கே.தேவ், விஜேந்தர் ஏதாவது தவறு செய்தாரா? என்று கேட்கவில்லை. அவர் ஹெராயின் பயன்படுத்தினாரா? என்ற சோதனையை நடத்தும்படி மட்டும் தான் கேட்கிறோம். தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் தங்களது முடிவை எழுத்துப்பூர்வமாக அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.