
நேரு கோப்பைக்கான கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. இதில் இந்தியா, கேமரூன், மாலத்தீவு, நேபாளம், சிரியா ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, சிரியா அணிகள் மோதின.
போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் போட்டியின் இடையே ஏற்பட்ட மழையை கூட பொருட்படுத்தாமல் இரு அணி வீரர்களும் சிறதுநேரம் ஆடினர். ஆனால் வெளிச்சமின்மை மற்றும் அதிக மழை பொழிவு காரணமாக போட்டியின் 34வது நிமிடத்தில் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு மீண்டும் போட்டி துவங்கியது. போட்டியின் 45வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் செட்ரி முதல் கோலை அடித்தார். மேலும் 84வது நிமிடத்தில் இந்திய வீரர் அந்தோணி பெரீரா 2வது கோலை அடித்தார். இந்த நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்த சிரியா அணிக்கு, 92வது நிமிடத்தில் அலா அல்ஸ்பிலி ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.
போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நேரு கோப்பைக்கான கால்பந்து தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கி உள்ளது.